கொல்கத்தா: பாலிவுட் நடிகை ஜரீன் கான் வெளிநாடு செல்லக்கூடாது என்று தடைவிதித்த கொல்கத்தா நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற துர்கா பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மும்பையில் வசித்து வரும் பாலிவுட் நடிகை ஜரீன் கான், சுமார் ரூ. 12 லட்சத்தை முன்பணமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அவர் குறிப்பிட்ட நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இவ்விவகாரம் ெதாடர்பாக ஜரீன் கான் மற்றும் அவரது மேலாளர் மீது நர்கெல்டங்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஜரீன் கான் மற்றும் அவரது மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை கொல்கத்தா நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக முறையாக ஆஜராகாத ஜரீன் கானுக்கு எதிராக கடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘மும்பையில் வசித்து வரும் ஜரீன் கான், நீதிமன்ற விசாரணையில் கட்டாயம் ஆஜராக வேண்டும். நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது. கொல்கத்தா காவல்துறையின் முன் அனுமதி பெறாமல் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுகிறது. வரும் 26ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டது.
The post ரூ.12 லட்சம் வாங்கிய விவகாரம்; நடிகை ஜரீன் கான் வெளிநாடு செல்ல தடை: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.