*குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு
திருவண்ணாமலை : சுமார் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளை அகற்றும் நடவடிக்கையை கைவிட ேவண்டும் என வலியுறுத்தி செங்கம் அடுத்த முறையாறு கிராம மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ பிரியதர்ஷினி தலைமையில் நடந்தது. அதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா, ஆர்டிஓ மந்தாகினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், அரசு நலத்திட்ட உதவிகள், சுய தொழில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 218 பேர் மனு அளித்தனர். தொடர்ந்து பெய்த மழையால் கிராமப்பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமடைந்திருப்பதால், குறைதீர்வு கூட்டத்திற்கு பொதுமக்களின் வருகை கடந்த சில வாரங்களாக குறைந்திருக்கிறது.
இந்நிலையில், போளூர் தாலுகா, காளசமுத்திரம் அடுத்த ரேணுகாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பழமையான கோயிலை தனிநபர்கள் உரிமை கொண்டாடுவதால், பொதுமக்கள் ஒருங்கிணைந்து வழிபாடு நடத்துவது பாதிக்கப்படுவதாகவும், தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சிக்கும் கோயிலை மீட்டுத்தர வலியுறுத்தியும் மனு அளித்தனர்.
இதேபோல், செங்கம் தாலுகா, செ.நாச்சிப்பட்டு அடுத்த முறையாறு கிராமத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சாலைேயாரத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் தங்கள் வீடுகளை இடிக்க நோட்டீஸ் அளித்திருப்பதால், வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
மேலும், வாழ்வதற்கு வேறு எவ்வித இடமோ, குடியிருப்போ இல்லாமல் வறுமை நிலையில் தவிக்கும் தங்களுக்கு, மாற்று இடம் வழங்கி வீடுகளை கட்டித்தர வேண்டும். வீடுகளை இழந்தால், பள்ளிகளுக்கு செல்லும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என தெரிவித்ததோடு, பள்ளி சீருடையுடன் தங்கள் குழந்தைளையும் உடன் அழைத்து வந்திருந்தனர்.
குறைதீர்வு கூட்டத்தில், தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், ெபாதுமக்கள் கொண்டு சென்ற பொருட்கள் மற்றும் பைகளை சோதித்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.
The post செங்கம் அடுத்த முறையாறு கிராமத்தில் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.