×

மங்கலம்பேட்டை அருகே துணிகரம் கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

மங்கலம்பேட்டை, டிச. 12: மங்கலம்பேட்டை அருகே கோயிலின் பூட்டை ரம்பத்தால் அறுத்து அம்மனின் 2 தாலி செயின் மற்றும் உண்டியலை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை அடுத்த ஆலடி அருகே உள்ள வீராரெட்டிக்குப்பத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் திருவிழா காலங்கள் மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும். வீராரெட்டிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் கோயிலில் நுழைவுவாயில், கருவறையில் உள்ள கதவுகளில் உள்ள 4 பூட்டுகளை ரம்பத்தால் அறுத்து பின்னர், மூலவர் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க தாலி, உற்சவர் அம்மன் சிலையில் இருந்த தங்க தாலி ஆகிய நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

மேலும் கோயிலில் இருந்த உண்டியலையும் அருகிலிருந்த விவசாய நிலத்திற்கு தூக்கி சென்று, அதிலிருந்த பணத்தை எடுத்துவிட்டு அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று காலை கோயிலுக்கு சென்ற பக்தர்களுக்கு பூட்டு உடைக்கப்பட்டு தங்க தாலி, உண்டியல் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு நடத்திய விசாரணையில், கோயிலில் கொள்ளை போன பணம் மற்றும் நகையின் மதிப்பு ரூ.1.5 லட்சம் இருக்கும் என தெரியவந்தது. மேலும் போலீசார் அப்பகுதியில் சி.சி.டி.வி கேமரா பதிவுகள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்ததுடன், தடயங்களை சேகரித்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அதிகாலையில் கோயிலின் பூட்டை ரம்பத்தால் அறுத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மங்கலம்பேட்டை அருகே துணிகரம் கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Vadhakaram ,Mangalampet ,
× RELATED கயத்தாறு அருகே துணிகரம் வீட்டை உடைத்து 65 பவுன் நகை, 1.5 லட்சம் பணம் கொள்ளை