×

திருப்போரூர் அருகே பரபரப்பு அதிமுக மாஜி அமைச்சரின் பேரன் மீது சரமாரி தாக்குதல்

சென்னை: முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசனின் பேரன் மகாராஜன். இவர், திருப்போரூர் அருகே நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை மகாராஜன் சக மாணவர்கள் விக்னேஷ், கவுதம், ஆகாஷ்வர் உள்பட 10க்கும் மேற்பட்டோருடன் கீழூர் என்ற இடத்தில் உள்ள டீ கடைக்கு வெளியே நின்று சிரித்துப்பேசி டீ குடித்தனர். அப்போது, அங்கு வந்த உள்ளூர் கும்பல், மருத்துவ மாணவர்களிடம் இப்படி சத்தம் போடக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கும்பல் திண்டுக்கல் சீனிவாசனின் பேரன் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கியுள்ளது. இதனால், மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். ஆனால், அந்த கும்பல் காரில் வைத்திருந்த அரிவாளுடன் பின்னால் விரட்டியுள்ளது.

தப்பிச்சென்ற மருத்துவ மாணவர்கள் திருப்போரூர் காவல் நிலையத்தில் மோதல் குறித்து தெரிவித்தனர். அப்போது, சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த மருத்துவ மாணவரான ஆகாஷ்வர் (23), திண்டுக்கல் சீனிவாசனின் மகன் டாக்டர் பிரபுவுடன் சென்று திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சம்பவ இடத்திற்கு சென்று, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மருத்துவ மாணவர்களை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர். இதனிடையே, தனது பேரன் தாக்கப்பட்டதை அறிந்த திண்டுக்கல் சீனிவாசன், செங்கல்பட்டு எஸ்பி சாய் பிரனீத்துக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

The post திருப்போரூர் அருகே பரபரப்பு அதிமுக மாஜி அமைச்சரின் பேரன் மீது சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Tiruporur ,Chennai ,Maharajan ,treasurer ,Dindigul Srinivasan ,Nellikuppam ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...