×

மொபட்டில் சென்றபோது குதிரை தாக்கியதில் பெண், 2 குழந்தைகள் படுகாயம்

 

காட்டுமன்னார்கோவில், டிச. 8: மொபட்டில் சென்றபோது குதிரை தாக்கியதில் பெண், 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆதனூர் கிராமம் கீழ் புளியம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி ஹசீனா(35). இவர் லால்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தினமும் காலை பள்ளிக்கு தனது இரண்டு பெண் குழந்தைகளுயுடன் மொபட்டில் செல்வார்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் குழந்தைகளுடன் ஹசீனா மொபட்டில் காட்டுமன்னார்கோவில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் இருந்த 5க்கும் மேற்பட்ட குதிரைகளில் ஒன்று ஹசீனா சென்ற பட் மீது பாய்ந்து குதித்தது. இதில் ஹசீனா மற்றும் அவரின் குழந்தைகள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு லால்பேட்டை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஹசீபாவின் கணவர் ராஜா அளித்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மொபட்டில் சென்றபோது குதிரை தாக்கியதில் பெண், 2 குழந்தைகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Kattumannarko, Cuddalore district ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!