×

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மனமகிழ் மன்றத்தை அகற்ற வேண்டும்

 

திருப்பூர், டிச.8: சேவூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மனமகிழ் மன்றத்தை அகற்ற வேண்டும் என, கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம், சேவூர் சுற்றுவட்டார பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் கிராமத்திற்கு உட்பட்ட பந்தம்பாளையத்தில் விவசாய பூமிகளுக்கு மத்தியில் மற்றும் சூர்யா அவென்யூ, சற்குரு அவென்யூ,

சூர்யா கார்டன், ராஜகணபதி நகர், செந்தூர்நகர், சத்யா நகர், கொங்கு நகர், ஆர்.கே. சிட்டி இந்த குடியிருப்புகளுக்கு மத்தியிலும், வெங்கடேஸ்வரா கேம்பிரிட்ஜ் ஸ்கூல் மற்றும் அரசு தொடக்கப்பள்ளியில் இருந்து மேல்நிலைப்பள்ளிகளுக்கு அருகிலும், மேட்டுப்பாளையம் ஊட்டி மற்றும் கோவை சேலம் நெடுஞ்சாலைகளுக்கு செல்லும் வழியில், போக்குவரத்து அதிகம் செல்லும் சாலையில் மனமகிழ் மன்றம் இடையூறாக அமைய உள்ளது.

வேட்டுவபாளையம் பஞ்சாயத்து முறியாண்டம்பாளையம் பஞ்சாயத்து மற்றும் சேவூர் பஞ்சாயத்து 3 கிராமசபை கூட்டங்களிலும் மனமகிழ் மன்றம் அமைய கூடாது என தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பகுதி பொதுமக்கள் சார்பாக முதலமைச்சரின் தனி பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளோம். தற்போது மனமகிழ் மன்றத்தின் நிர்வாகிகள் மனமகிழ் மன்றத்தை செயல்படுத்தியே தீர்வோம் என கூறிக்கொண்டிருக்கிறார்கள். மேற்படி மனமகிழ் மன்றம் திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும். எனவே மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

The post பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மனமகிழ் மன்றத்தை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Manajoy Forum ,Tirupur ,Managizh Manoram ,Sewur ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்