×

உரிய விலை கிடைப்பதால் உருளைக்கிழங்கு அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்

ஊட்டி: உருளைக்கிழங்கிற்கு உரிய விலை கிடைப்பதால், நீலகிரி விவசாயிகள் அறுவடை பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், முள்ளங்கி உட்பட பல்வேறு மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது. எனினும் அதிகளவு உருளைக்கிழங்கு மற்றும் கேரட் பயிரிடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு சுவை அதிகம் என்பதால், விலை அதிகமாக கிடைப்பது வாடிக்கை. இதனால், பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அதிகளவு உருளைக்கிழங்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது கர்நாடக மாநிலம் கோலார் மற்றும் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவு உருளைக்கிழங்கு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அதேபோல் கொடைக்கானல் பகுதியில் இருந்தும் உருளைக்கிழங்கு வரத்து உள்ளது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு விலை குறையாமல் இருந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு லாபமும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் உருளைக்கிழங்கு அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post உரிய விலை கிடைப்பதால் உருளைக்கிழங்கு அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Nilgiris district ,
× RELATED கேரட் விலை புதிய உச்சத்தை எட்டியது