×

ஊராட்சி மன்ற தலைவிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது ‘எனக்கு வீடு ஒதுக்காவிட்டால் ஒழித்துவிடுவேன்’

செய்யாறு, டிச.2: செய்யாறு அருகே ‘எனக்கு அரசு வழங்கும் வீடு ஒதுக்காவிட்டால் ஒழித்துவிடுவேன்’ என ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா ராந்தம் கிராமத்தை சேர்ந்தவர் அமுதா(47), ஊராட்சி மன்ற தலைவி. இவரது கணவர் கிருஷ்ணன்(56). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வீட்டின் அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அதேகிராமத்தை சேர்ந்த மனோகரன்(28) என்பவர், ‘ஏன் எனக்கு இன்னும் அரசு வழங்கும் வீடு ஒதுக்கீடு செய்யவில்லை’ என கேட்டுள்ளார். அதற்கு அமுதாவும், அவரது கணவர் கிருஷ்ணனும், ‘சீனியாரிட்டிபடி வரிசையாக வீடுகள் வரும். அடுத்தாண்டு உங்களுக்கு கிடைக்கும்’ என கூறினார்களாம். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மனோகரன் எனக்கு வீடு வரவில்லை என்றால் இருவரையும் ஒழித்து கட்டிவிடுவேன் என ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும், கிருஷ்ணனை சரமாரியாக தாக்கினாராம். இதுகுறித்து கிருஷ்ணன் நேற்று முன்தினம் மோரணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், எஸ்ஐ சதீஷ்குமார் வழக்குப்பதிந்து மனோகரனை கைது செய்தார்.

The post ஊராட்சி மன்ற தலைவிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது ‘எனக்கு வீடு ஒதுக்காவிட்டால் ஒழித்துவிடுவேன்’ appeared first on Dinakaran.

Tags : Panchayat Council ,Seiyaru ,Dinakaran ,
× RELATED அனுமதியின்றி மணல் எடுத்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கைது..!!