×

ஆடி மாத உண்டியல் காணிக்கை ₹3.46 கோடி 305 கிராம் தங்கம், 1,492 கிராம் வெள்ளியும் கிடைத்தது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, ஜூலை 26: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆடி மாத உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில், ₹3.46 கோடியை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, ஆடி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. கோயில் இணை ஆணையர் ஜோதி மற்றும் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் நடந்த பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரம், கிரிவலப்பாதை மற்றும் அஷ்டலிங்க சன்னதிகளில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

இதில், கோயில் உண்டியலில் ₹3 கோடியே 46 லட்சத்து 69 ஆயிரத்து 541ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 305 கிராம் தங்கம், 1,492 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதேபோல், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை தொகை கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயிலுக்கு தினசரி வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், வார இறுதி நாட்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 ஆயிரம் பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் சுமார் 2 லட்சம் பக்தர்களும் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, சமீப காலமாக ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கையும் சுமார் ₹3 கோடிக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

The post ஆடி மாத உண்டியல் காணிக்கை ₹3.46 கோடி 305 கிராம் தங்கம், 1,492 கிராம் வெள்ளியும் கிடைத்தது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Annamalaiyar Temple ,Thiruvannamalai ,Tiruvannamalai ,Annamalaiyar Temple ,
× RELATED தொடர் விடுமுறை நாட்களால்...