×

மாணவி மதி மரண வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றம் 13ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

விழுப்புரம், டிச. 2: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(17). கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த அவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்திகாவை வழக்கிலிருந்து நீக்கியிருந்தனர்.

இதுதொடர்பாக மாணவி தரப்பில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதற்கு நீதிமன்றத்தில் ஆஜராகிய மாணவியின் தாய் செல்வி கேட்ட குற்றப்பத்திரிக்கை நகல், ஆவணங்கள் வழங்கப்பட்டன. ஆட்சேபனை தெரிவிக்க போதியகால அவகாசம் கேட்டநிலையில், மேலும் குற்றப்பத்திரிக்கையில் விடுபட்ட வழக்கு ஆவணங்கள், பள்ளி வளாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், ஜிப்மர்மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கை நகலை வழங்கக்கோரி 2வது முறையாக செல்வி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். நேற்று மீண்டும் வழக்குவிசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி போலீசார் வாதத்தை தொடங்குவதற்கு காலஅவகாசம் கேட்டனர். தொடர்ந்து நீதிபதி புஷ்பராணி, கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டு அமர்வு நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு கோப்புகள் அங்கு மாற்றப்படுவதாக அறிவித்து வரும் 13ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் இந்த வழக்கு விசாரணை இனிமேல் கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

The post மாணவி மதி மரண வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றம் 13ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Villupuram ,Kallakurichi court ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண...