×

பாகூர் அரசு விழாவில் பரபரப்பு ரேஷன் கடைகள் ஏன் இல்லை? கவர்னரை பெண்கள் முற்றுகை பதில் சொல்ல முடியாமல் தமிழிசை ‘எஸ்கேப்’

பாகூர், டிச. 2: பாகூரில் நடந்த அரசு விழாவில் கவர்னரிடம், ேரஷன் கடைகளை திறக்கக்கோரி பெண்கள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. `நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் வாயிலாக நலத்திட்டங்களின் செறிவூட்டலை அடைவதற்கான விழிப்புணர்வு நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாகூர் கிழக்கு பகுதியில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. கவர்னர் தமிழிசை, கலெக்டர் வல்லவன், துணை ஆட்சியர் மகாதேவன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வேளாண் துறை, குடிமைப்பொருள் வழங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் திடீரென மேடைக்கு சென்று கவர்னரிடம், இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் உள்ளன.

ஆனால் புதுச்சேரியில் மட்டும் தான் ரேஷன் கடைகள் இல்லை. ரேஷன் கடையை எப்போது திறக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடி, மாதம் 5 கிலோ அரிசி ரேஷன் கடை மூலமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். நீங்கள் எதன் மூலமாக மக்களுக்கு வழங்குவீர்கள்? மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய ரேஷன் கடையை மூடிவிட்டு, நீங்கள் எந்த திட்டத்தை வழங்கி சாதிக்கப் போகிறீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அதற்கு கவர்னர், அப்புறம் பேசிக் கொள்ளலாம். பிறகு இதற்கான பதில் சொல்கிறேன் என்றார். இருந்தும் அங்கிருந்த இந்திய தேசிய மாதர் சம்மேளன தலைவர் தசரதா, அமுதா உள்ளிட்ட பெண்கள் கவர்னரிடம் மீண்டும் ரேஷன் கடை பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கவர்னர் அவர்களிடம், புதுச்சேரி மக்கள் பணத்தைத்தான் விரும்புகிறார்கள் அதனால் அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறிவிட்டு, ரேஷன்கடை குறித்து எந்த பதிலும் சொல்லாமல், அவசர அவசரமாக கிளம்பி விட்டார். இதனை தொடர்ந்து, எரிவாயு மற்றும் வீடு கட்ட மானியம் பெற்ற பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களை சந்தித்தார்.பாகூர் அருகே அரங்கனூரில் நேற்று முன்தினம் நடந்த அரசு விழாவில் கவர்னரிடம், அரசு விழாவுக்கு தன்னை அழைக்காதது ஏன்? என லட்சுமிகாந்தன் எம்எல்ஏ கேள்வி எழுப்பிய நிலையில், நேற்று, கவர்னரிடம் ரேஷன் கடைகள் திறக்காதது ஏன்? எனக்கேட்டு பெண்கள் வாக்குவாதம் ெசய்த சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பாகூர் அரசு விழாவில் பரபரப்பு ரேஷன் கடைகள் ஏன் இல்லை? கவர்னரை பெண்கள் முற்றுகை பதில் சொல்ல முடியாமல் தமிழிசை ‘எஸ்கேப்’ appeared first on Dinakaran.

Tags : Bagur Govt Festival ,Bagur ,Bagoor ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்