விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த 6 வயது சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அப்போது திடீரென நாய் ஒன்று சிறுவன் மீது பாய்ந்து, அவனது தலையை கவ்வி இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் நாயை துரத்த முயன்றனர். ஆனால் விடாமல் சிறுவனை கடித்து குதறியது.
கட்டையை எடுத்து துரத்திய நிலையில் சிறுவனை விட்டுவிட்டு தப்பி ஓடியது. தலை, முகம், கைகளில் பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர். அங்கு சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். விருதுநகரை சுற்றியுள்ள சிவஞானபுரம், பாவாலி, கூரைக்குண்டு, ரோசல்பட்டி ஊராட்சிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் இதனால் மாதம் தோறும் 50க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு ஆளாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
The post 6 வயது சிறுவனின் தலையை கவ்வி இழுத்துச் சென்ற நாய் appeared first on Dinakaran.
