×

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டி முன்னாள் எம்.பி. பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துக்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். விசாரணையின்போது கே.சி.பழனிசாமி தரப்பில், அவதூறு கருத்துக்கான அனைத்து ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை தள்ளுபடி செய்தது தவறு என்று வாதிடப்பட்டது.

அதேசமயம் எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து கே.சி.பழனிசாமியை நீக்கியதாகவும், அதன் பிறகு கட்சி தொடர்பான அவரது செயல்பாடுகளை தடுக்கவே வழக்கு தொடர்ந்ததாகவும், அந்த வழக்கில் தெரிவித்த கருத்துக்கள் அவதூறானவை அல்ல என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து கட்சியில் இருந்து உறுப்பினர் நீக்கம் தொடர்பான நடைமுறைகளையும், கே.சி.பழனிசாமியை நீக்கியது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது.

ஆனால் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு மற்றும் கே.சி.பழனிசாமிக்கு எதிரான ஆதாரங்கள் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதாவது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி-க்கு எதிரான கே.சி.பழனிச்சாமியின் அவதூறு வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் ஆணை appeared first on Dinakaran.

Tags : KC Palaniswami ,Edappadi Palaniswami ,Madras High Court ,Chennai ,AIADMK ,General ,KC ,Palaniswami ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...