×

சட்ட விரோதமாக மணல் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு…அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

சென்னை:சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்க துறை அனுப்பிய சம்மன்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதுதொடர்பாக அமலாக்க துறை வழக்குப்பதிவு செய்து, பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது. இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன், ஆதார் அட்டை விவரங்களுடனும் ஆஜராகும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த சம்மன்களை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ‘சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் அமலாக்க துறை விசாரணை நடத்த முடியாது. சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்குட்பட்டது. அமலாக்க துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. பாஜ ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலாக்க துறை நடவடிக்கை எடுக்க முடியாது. அமலாக்க துறை ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறது.

எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை அமலாக்க துறையும் மறுக்கவில்லை. குவாரி உரிமைதாரர் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா? யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது. பல மாவட்ட கலெக்டர்களிடம் விவரங்களை கேட்டு பெறலாம். விசாரணைக்கு உதவும்படி

கோரலாம். சம்மன் அனுப்ப முடியாது. மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்க துறைக்கு அதிகாரமில்லை. மாநில அரசு விவகாரங்களில் தலையிடும் வகையில் அனுப்பப்பட்டுள்ள சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார்.அதற்கு, அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. கனிம வள சட்டம் மட்டுமல்லாமல், இந்திய தண்டனை சட்டம், ஊழல் தடுப்புச சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை சமர்ப்பிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவரங்கள்தான் கேட்கப்பட்டது. அவை அமலாக்கத்துறைக்கு வழங்கப்படவில்லை. விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமான விவரங்கள் விசாரணைக்கு உதவியாகத்தான் கேட்கப்பட்டது’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘பிறகு எதற்கு சம்மன் அனுப்பப்பட்டது?. விசாரணைக்கு உதவி செய்ய கேட்பதும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. சம்மன் அனுப்பியதில் உள்நோக்கம் இருக்கிறது. குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் உள்ளது? என கேள்வி எழுப்பினர். இதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர், ‘விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. செயற் பொறியாளர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆதாரங்களை சேகரிப்பதற்கான விசாரணைதான் இது. தற்போது சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. விசாரணை தான் நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் சட்ட விரோத குவாரி நடப்பதாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாநில அரசு கூறியிருக்கிறது. மாநில அரசு விசாரிப்பதை தடுக்கவில்லை. கனிம வள சட்ட வழக்குகளை அமலாக்க துறை விசாரிக்கவில்லை. மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் தான் விசாரணை நடத்தப்படுகிறது. அதற்கு அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த விசாரணையை மாநில அரசு தடுக்க முடியாது’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘அனைத்து குவாரிகளின் விவரங்களை எப்படி கேட்க முடியும். சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ள வழக்குகளின் விவரங்களை மட்டும் கேட்கலாம். அந்த தகவல்களை தராவிட்டால் வழக்கு தொடரலாம்’ என்றனர். இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘ஒரு யூனிட் மணல் விற்பதன் மூலம் 1900 ரூபாய் அரசுக்கு வருகிறது. ஆனால் 20 ஆயிரம் ரூபாய் வரை தனியாருக்கு செல்கிறது. இந்த விவரங்களை சேகரிக்க அதிகாரம் உள்ளது. சட்டவிரோத குவாரிகள் இல்லை என்று மாநில அரசு கூற முடியாது. இந்த சட்டவிரோத மணல் விற்பனை மூலம் கிடைத்த பணம் குறித்து அமலாக்க துறை விசாரிக்க முடியும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 28 குவாரிகளில் நடத்திய சோதனையில், 27.70 லட்சம் யூனிட் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததன் மூலம், ரூ.4500 கோடி பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது. அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது’’ என்றார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ‘‘அரசு யாரையும் பாதுகாக்கவில்லை.

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன்?’’ என்றார். அதற்கு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ‘‘அமலாக்க துறையிடம் சாட்சியம் அளித்த அரசு அதிகாரி, சட்டவிரோத மணல் கொள்ளை நடந்துள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படாத அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல’’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘‘ஏராளமான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகள் உள்ளன. அவற்றை விசாரணை செய்ய வேண்டும். தேர்ந்தெடுத்து விசாரணை நடத்த முடியாது. சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ஏன் அமலாக்க துறைக்கு வழங்க கூடாது?’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு துஷ்யந்த் தவே, ‘‘சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆதாரங்களை சுட்டிக்காட்டினால், அந்த முதல் தகவல் அறிக்கைகளை வழங்க தயார்’’ என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான உத்தரவை இன்று தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், இன்று காலை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி, ‘‘சம்மனுக்கு தடை விதிக்க ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளோம். கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது விசாரணைக்கு உதவுவதற்காக தான். கைது செய்யவோ, வழக்கு பதியவோ மாட்டோம்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்கப்படுகிறது. அமலாக்க துறையின் ஆட்சேபனை மனுவுக்கு தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post சட்ட விரோதமாக மணல் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு…அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...