×

மணலி சடையன்குப்பத்தில் மயான பாதையில் மழைநீர் தேக்கம்: சீரமைக்க கோரிக்கை

திருவொற்றியூர்: மணலி சடையன்குப்பம் மயானத்திற்கு செல்லும் பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மணலி மண்டலம், 16வது வார்டுக்கு உட்பட்ட சடையன்குப்பம், இருளர் காலனி பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த, 2 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், சடையன்குப்பம் பகுதியில் உள்ள மாநகராட்சி மயானத்தை இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக பயன்படுத்தி வந்தனர்.

இந்த மயானத்திற்கு செல்லும் பாதையில், மின் விளக்குகள், தண்ணீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும், மயான பாதை குண்டு, குழியுமாக உள்ளது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, இப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், சவ அடக்கம் செய்ய செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த மயான பாதையை சீரமைத்து, மயானத்தை சுற்றிலும் சுற்றுசுவர் அமைத்து, அனைத்து அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மணலி சடையன்குப்பத்தில் மயான பாதையில் மழைநீர் தேக்கம்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sadayankuppam ,Manali ,Tiruvottiyur ,Manali Sadayankuppam ,Dinakaran ,
× RELATED மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த...