திருமலை: தெலங்கானாவில் தேர்தல் விதி எதிரொலியால் ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.707 கோடி மதிப்புள்ள பணம், நகை, மற்றும் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரேகட்டமாக வரும் 30ம்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் வாக்காளர்களுக்கு பரிசுபொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள், தங்கம், வெள்ளி நகை மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் நேற்று வரை ரூ.707 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், பணம், போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் ரூ.282 கோடிக்கு கட்டுக்கட்டாக பணம், ரூ.186 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள், ரூ.117 கோடி மதிப்புள்ள மது மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பொருட்கள், ரூ.39 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், ரூ.83 கோடி மதிப்புள்ள அரிசி, லேப்டாப், சேலைகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post தெலங்கானாவில் ரூ.707 கோடி மதிப்பிலான நகை, பணம் பறிமுதல்: ஆவணங்களின்றி கொண்டு வந்ததால் நடவடிக்கை appeared first on Dinakaran.

