சென்னை, நவ.26: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி மெட்ரோ ரயிலில் ₹5 கட்டணத்தில் பயணம் செய்யலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, க்யூஆர் பயணச்சீட்டுகளில் (பேடிஎம், வாட்ஸ்அப், போன்-பே) ஒற்றை பயண க்யூஆர் பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெறும் ₹5 என்ற பிரத்யேக கட்டணத்தை வழங்க உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள தினத்தை நினைவுகூரும் வகையில் மற்றும் பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேக கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிசம்பர் 3ம் தேதி க்யூஆர் பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் வெறும் ₹5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம். பிரத்யேக கட்டணம் டிசம்பர் 3 அன்று மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது. சென்னை மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம், என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post நிறுவன அடித்தள நாளை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் 3ம் தேதி ₹5 கட்டணத்தில் பயணம்: நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.
