ஊட்டி, நவ.26: நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகே அரசின் தமிழகம் ஆய்வு மாளிகை மாவட்ட ஆட்சித் தலைவரின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகம் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. நீலகிரி வரக்கூடிய முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தமிழகம் மாளிகையில் தான் தங்கி செல்வார்கள். தமிழகம் மாளிகைக்கு செல்ல ஹில்பங்க் பகுதியில் இருந்து பிங்கர்போஸ்ட் வரை சாலை உள்ளது.
இச்சாலை வழியாக ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கும் செல்ல முடியும். இச்சாலையின் இருபுறமும் வனப்பகுதியாகும். முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் நாள்தோறும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் தூய்மை பகுதி என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலையை ஒட்டியுள்ள வனத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளும் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் உணவு தேடும் போது பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு உயிரிழக்க கூடிய அபாயம் நீடிக்கிறது.
எனவே இப்பகுதியில் வனத்தில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதுன், குப்பைகள் கொட்டாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல பிங்கர்போஸ்ட் அருகே மேல்போகி தெரு பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே நகராட்சி பூங்கா உள்ளது. இப்பூங்கா தற்போது பராமரிப்பின்றி அசுத்தமாக காட்சியளிப்பதுடன் வேலிகள் சேதப்படுத்தப்பட்டு கால்நடைகள் கட்டி வைக்கும் இடமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே இந்த நகராட்சி பூங்காவையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
The post தமிழகம் மாளிகைக்கு செல்லும் வழியில் வனப்பகுதியில் குவிந்த குப்பைகள்: தூய்மைப்படுத்த மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.