×

ரூ.1.4 லட்சம் கோடியில் போர் விமானம், ஹெலிகாப்டர்கள்: பாதுகாப்பு அமைச்சக அதிகாரி தகவல்

புதுடெல்லி: உள்நாட்டிலேய விமானம் தாங்கி கப்பல், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் மூன்று புதிய ராணுவ திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்டை நாடான சீன எல்லையை விரிவுபடுத்த ஆக்கிரமிப்பு முயற்சிகளில் இறங்கி இருப்பதை தடுக்க, நாட்டின் போர் திறனை அதிகரிக்கவும், ராணுவ பலத்தை வலுப்படுத்தவும் பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாட கொள்முதல், உற்பத்தி ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்து வருகிறது. இந்நிலையில், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் வரும் 30ம் தேதி பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், உள்நாட்டிலேயே கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ரூ.40,000 கோடி செலவில் மேலும் ஒரு விமானம் தாங்கி கப்பல், எச்ஏஎல் தயாரிப்பில் ரூ.55,000 கோடி செலவில் கூடுதலாக 97 தேஜஸ் மார்க்-1ஏ போர் விமானங்கள் மற்றும் சியாச்சின், கிழக்கு லடாக் பகுதிகளின் பனிமலை உச்சியில் பாதுகாப்பு பணிக்காக ரூ.45,000 கோடி செலவில் 156 இலகு ரக பிரசாண்ட் ஹெலிகாப்டர்கள் (ராணுவத்துக்கு 90, விமானப்படைக்கு 66) தயாரிக்க என மொத்தம் ரூ.1.4 லட்சம் கோடி செலவில், 3 புதிய மெகா ராணுவ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்த முன்மொழிவுகளுக்கான தேவைக்கு அனுமதி வழங்கப்பட்டதும் ஒப்பந்தபுள்ளி கோருவது தொடர்பான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post ரூ.1.4 லட்சம் கோடியில் போர் விமானம், ஹெலிகாப்டர்கள்: பாதுகாப்பு அமைச்சக அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Defense Ministry ,New Delhi ,Dinakaran ,
× RELATED எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில்...