×

ஆவடி அருகே திடீர் பரபரப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் புகை : பயணிகள் பீதி

சென்னை, நவ. 23: ஆவடி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கரும்புகை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி திருவனந்தபுரம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் நேற்று காலை 8.02 மணியளவில் திருநின்றவூர்-நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது பி1 வகுப்பு, ஏசி பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதை பார்த்ததும் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் பீதி அடைந்து, ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. அதற்குள்ளாக ரயில் பயணிகள், பெட்டிக்குள் இருந்த தீயணைப்பான் கருவியால் ஏசி பெட்டியில் ஏற்பட்ட கரும்புகையை அணைக்க முயற்சித்தனர். மேலும், ரயில் டிரைவர் மற்றும் கார்டு ஆகியோர் விரைந்து வந்து, ஏசி பெட்டியின் அடிப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது, ஏசி பெட்டிக்கு அடியில் உள்ள சக்கரத்தின்கீழ் பிரேக் பிணைப்பு பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது தெரியவந்தது. பிரேக் ஷூ பகுதியில் ஏற்பட்டிருந்த பழுதுகளை ரயில்வே ஊழியர்கள் உடனடியாக மாற்றி சீரமைத்தனர். இதை தொடர்ந்து, சுமார் 20 நிமிடம் தாமதமாக திருவனந்தபுரம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையை நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post ஆவடி அருகே திடீர் பரபரப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் புகை : பயணிகள் பீதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Avadi ,Avadi Express ,Dinakaran ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!