×

பரவலாக தொடரும் மிதமான மழை வேலூர் மாவட்டத்தில்

வேலூர், நவ.23: வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், தென் மற்றும் மத்திய மாவட்டங்களிலும், ஒரு சில வடமாவட்டங்களிலும் மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையே பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக வேலூர் மாவட்டத்தில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக லேசான மழை தொடர்ந்து பெய்கிறது. வேலூரில் அதிகாலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வேலூரில் முள்ளிப்பாளையம் கே.கே.நகர், கன்சால்பேட்டை, சமத் நகர், சைதாப்பேட்டை, சுண்ணாம்புக்கார தெரு, கொசப்பேட்டை உட்பட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தெருவில் ஆறாக ெபருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 57.40 மி.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக பேரணாம்பட்டில் 14.20 மி.மீ மழை பதிவானது. சராசரி மழை அளவு 4.42 மி.மீ.
மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): வேலூர் 2.20, சத்துவாச்சாரி 10, காட்பாடி 2.40, திருவலம் 4.20, பொன்னை 2.20, கே.வி.குப்பம் 1.20, ராஜாதோப்பு அணை 3, மோர்தானா அணை 2, மேலாலத்தூர் 2.60, குடியாத்தம் 13.40.

The post பரவலாக தொடரும் மிதமான மழை வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராயம் விற்பவர், தயாரிப்பவர்...