×

தியாகதுருகம் அருகே பரபரப்பு செங்கல் சூளை உரிமையாளர் மர்ம சாவு உறவினர்கள் திடீர் சாலை மறியல்

தியாகதுருகம், நவ. 23: தியாகதுருகம் அருகே செங்கல் சூளை உரிமையாளர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள புதுமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் சோலையப்பன்(35). இவருக்கு திருமணமாகி விஜயசாந்தி என்ற மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். சோலையப்பன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ் நகரைச் சேர்ந்த சேகர் என்பவரது நிலத்தில் செங்கல் சூளை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கல் சூளை அருகே மின்மோட்டார் கட்டிடத்தில் உள்ள ஜன்னலில் சோலையப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது நண்பர் குமார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எடைக்கல் போலீசார் வெட்டுக்காயங்களுடன் கிடந்த சோலையப்பனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் புதுமாம்பட்டு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் சோலையப்பன் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கள்ளக்குறிச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரியமாம்பட்டு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விைரந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உறவினர்கள் சோலையப்பன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு எடைக்கல் காவல்நிலைய அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக தெரிவித்தனர். ஆகையால் சம்பந்தபட்ட கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும், இதற்கு காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வையில் குழு அமைத்து விசாரணை மேற்க்கொள்ள வேண்டும் என கூறினர். அப்போது காவல்துறை சார்பில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின்பேரில் மறியலை கைவிட்டனர். பின்னர் சோலையப்பன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

The post தியாகதுருகம் அருகே பரபரப்பு செங்கல் சூளை உரிமையாளர் மர்ம சாவு உறவினர்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Thiagadurugam ,Martyrdom ,Thyagathurugam ,Dinakaran ,
× RELATED 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 100...