×

சென்னையில் வரும் 25, 26ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

சென்னை: சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம், வரும் 25, 26ம் தேதிகளில் நடைபெற உள்ளது, என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் 2024-ன் கீழ் வாக்காளர் பட்டியல் வெளியிட உத்தரவிட்டது. அதன்படி சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 27.10.2023 அன்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக 27.10.2023 முதல் 9.12.2023 வரை சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தாரின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் உள்ளதா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்தும், பெயர் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 27.10.2023 முதல் 9.12.2023 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதகிருஷ்ணன் முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர் தலைமையில் தேர்தல் பதிவு அலுவலர்கள், உதவி தேர்தல் பதிவு அலுவலர்களுடனான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2024 குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மாநகராட்சி கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில், சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம், வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படவுள்ளன. அந்த முகாம்களில், படிவங்கள் 6, 6ஏ, 7 மற்றும் 8 பெற்று, பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுமக்கள் https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும், தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். இப்பணிகளை ஆய்வு செய்ய சென்னை மாவட்டத்துக்கு வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளராக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர் மைதிலி ராஜேந்திரன், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார், என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் வரும் 25, 26ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Election ,Chennai district ,Dinakaran ,
× RELATED நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை...