×

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவர்கள் விடுவிப்பு

மீனம்பாக்கம்: ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடல்களில் மீன் பிடித்து கொண்டிருந்த 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த அக்டோபர் மாதம் 3வது முறையாக கைது செய்து, அவர்களது படகுகள் மற்றும் மீன்களையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். அங்கு மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இலங்கை சிறையிலடைத்தனர். இந்த சம்பவத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டித்தார். அதோடு ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதி, ‘சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 8ம் தேதி 26 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் 4 பேர் விடுவிக்கப்பட்டனர். 22 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 38 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஏற்கனவே காவல் நீடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். மொத்தமுள்ள 64 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், தங்களது பராமரிப்பில் வைத்து கொண்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அனைவருக்கும் பாஸ்போர்ட் விசாக்கள் இல்லாததால், இந்திய தூதரகம் எமர்ஜென்சி சான்றிதழ் வழங்கியது. பின்னர் அவர்களுக்கான விமான டிக்கெட்கள் ஏற்பாடுகளையும் தூதரகம் செய்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை, இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 15 மீனவர்கள், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு சார்பில், மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்றனர். பின்னர் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் ஏற்றப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கையில் இந்திய தூதரக பராமரிப்பில் இருக்கும் மற்ற மீனவர்கள், அடுத்தடுத்த சில நாட்களில் விமானங்கள் மூலம் சென்னை வருவார்கள் என்று கூறப்படுகிறது.

The post இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவர்கள் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Rameswaram ,Mandapam ,
× RELATED இலங்கை கடற்படை சிறைபிடித்த 22 மீனவர்களின் காவல் நீட்டிப்பு