×

மாடு தூக்கி வீசியதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கி வீசியதில் அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். நாகப்பட்டினம் மேலகோட்டவாசல் பகுதியை சேர்ந்தவர் சபரிராஜன்(55). இவர், மேலகோட்டைவாசல் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே நேற்றுமுன்தினம் மாலை நடந்து சென்றார். அப்போது அங்கு சாலையில் சுற்றித்திரிந்த பசுமாடு அவரை முட்டி தூக்கி வீசியது. அப்போது திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் சென்ற அரசு பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கிசபரிராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நாகப்பட்டினம் நகர போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதாக தகவலறிந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். அவர்களிடம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பஸ்சில் பயணம் செய்யும் போது விழுந்து இருந்தால் டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு பதிவு செய்யலாம். மாடு யாருடையது என்பதை விசாரித்து அதன் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் அல்லது சாலையில் சுற்றிதிரிந்த மாடுகளை பிடிக்காமல் விட்ட நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்வது முறையில்லை என கூறினர். இதனால் யார் மீது வழக்குப்பதிவு செய்வது என தெரியாமல் போலீசார் குழப்பம் அடைந்தனர்.

The post மாடு தூக்கி வீசியதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கஞ்சா கடத்தல் அதிமுக நிர்வாகி கைது