×

தவறான செய்திகளை கண்டறிய அரசால் அமைக்கப்பட்டுள்ள உண்மை சரிபார்ப்பு குழு அமைத்ததில் என்ன தவறு? அதிமுக தரப்புக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ‘‘தவறான செய்திகளை கண்டறிவதற்காக தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பு குழு அமைத்ததில் என்ன தவறு உள்ளது’’ எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இக்குழு நியமனத்தை எதிர்த்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளை கண்டறியும் வகையில் அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்த குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதிக்கக் கோரி அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். அவரது வாதத்தின்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, பொய் செய்திகள் பரவுவதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா? இது ஒரு சரிபார்ப்பு முறை தானே, இதில் என்ன தவறு? காவல் துறைக்கு உதவத்தானே குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கேட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ‘‘பொய் செய்தி பரப்பியதாக மனுதாரர் மீது ஏற்கனவே குற்றவியல் வழக்கு உள்ளது.

வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த தகுதியும் இல்லை என்றார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பீகார் தொழிலாளர்கள் தொடர்பாக தவறான செய்தி பரவியதைச் சுட்டிக்காட்டயதுடன் குழுவில் தகுதியான நபர்தான் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார். இதையடுத்து, மத்திய அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்பு குழுவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த வழக்கின் முடிவை தெரிந்து கொள்ளலாம் எனக் கூறி, அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post தவறான செய்திகளை கண்டறிய அரசால் அமைக்கப்பட்டுள்ள உண்மை சரிபார்ப்பு குழு அமைத்ததில் என்ன தவறு? அதிமுக தரப்புக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Tamilnadu government ,ICourt ,Dinakaran ,
× RELATED காலி மது பாட்டில்களை உடனடியாக...