×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 6வது நாளாக சிகிச்சை; மூளை நரம்பில் ரத்த அடைப்புகள் இருப்பது கண்டுபிடிப்பு: இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இன்று மீண்டும் பரிசோதனை


சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்றுடன் 6-வது நாளாக சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், மூளை நரம்பில் ரத்த அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இரைப்பையிலும் கட்டிகள் இருப்பதால், குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இன்று மீண்டும் பரிசோதனை நடத்த உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நவம்பர் 20ம் தேதியான இன்று விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், அவர் திடீரென கடந்த 15ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆம் தேதி புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மதிய உணவை உட்கொண்டார். அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே அவருக்கு கால் மரத்து போகும் பிரச்சினையும் இருந்து வந்தது. இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்களின் அறிவுரைபடி அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இசிஜி பரிசோதனை எடுக்கப்பட்டு அதில் சீரற்ற நிலை இருந்ததால் மேல்சிகிச்சைக்காக அன்றைய தினமே ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். செந்தில் பாலாஜி உடல் மெலிந்து அவரால் நடக்க முடியாத அளவுக்கு இருக்கிறார்.

அவருக்கு கால் மரத்து போவதால் சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதையடுத்து எம்ஆர்ஐ ஸ்கேனும் எடுக்கப்பட்டது. அதில், அவருக்கு மூளையில் உள்ள நரம்பில் ரத்த அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தான் கால் மரத்து போகிறது என மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில் முதுகுத்தண்டுவடத்தில் வலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, இன்று 6-வது நாளாக இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்களால், மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள பட உள்ளது. இது தவிர கழுத்து பகுதி சவ்வில் பாதிப்பு இருந்ததன் காரணமாக, நரம்பியல் துறை மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இதயவியல் துறை மருத்துவர்களும் அவரை கண்காணித்து வருகின்றனர்.

அத்துடன் அவருக்கு கணையத்தில் இருக்கும் கொழுப்பு கட்டியை கரைப்பது குறித்தும் நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய உடல்நல பிரச்சினைகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாமா அல்லது மருந்து மாத்திரை மூலமே குணப்படுத்தி விடலாமா என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 6வது நாளாக சிகிச்சை; மூளை நரம்பில் ரத்த அடைப்புகள் இருப்பது கண்டுபிடிப்பு: இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இன்று மீண்டும் பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு!