சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: எல்லைத் தாண்டி மீன் பிடிக்கச் சென்றதாக கூறி, பாம்பன் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மட்டுமல்லாது கடற்கொள்ளையர்கள் என்ற பெயரில் அந்த நாட்டு குண்டர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றார்கள். தமிழக மீனவர்களின் பலநூறு கோடி ரூபாய் மதிப்பிலான படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டும், அழிக்கப்பட்டும் இருக்கின்றன.
இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கிய போது தமிழக அரசு பலகோடி ரூபாய் மதிப்பிலான உணவு, மருந்து பொருட்களை அனுப்பி உதவியது. அங்குள்ள தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உதவியிருக்கிறது. இந்திய அரசு இதுவரை ரூ.32,000 கோடி இலங்கைக்கு கடனுதவி வழங்கியிருக்கிறது. மேலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவி செய்வதற்கும், உலக வங்கி கடன் வழங்குவதற்கும் இந்தியா சான்றிதழ் வழங்கியிருக்கிறது.
ஆனால், இலங்கை கடற்படை எந்தவித மனிதாபிமானமும் இன்றி தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவித்தும், கைது செய்தும், அச்சுறுத்தியும் வருவது வாடிக்கையாகி விட்டது. ஒன்றிய அரசு இதுவரை இப்பிரச்னையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கு முயற்சிக்கவில்லை. தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாப்பது ஒன்றிய அரசின் கடமை.
பேச்சு வார்த்தை பலனளிக்கவில்லை என்றால், இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்த வேண்டும். அப்போது தான் இந்தியாவின் மீது இலங்கை அரசுக்கு பயம் வரும். தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் உள்ளாவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். தமிழர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும், கட்சத்தீவை மீட்கவும் ஒன்றிய அரசு இப்பிரச்னையில் தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post இந்திய கடற்பகுதியில் எல்லை தாண்டி வரும் இலங்கை கடற்கொள்ளையர்களை சுட்டு வீழ்த்த வேண்டும்: துரை வைகோ பரபரப்பு அறிக்கை appeared first on Dinakaran.
