கே.வி.குப்பம். நவ.18: குடியாத்தத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தினார். குடியாத்தம் அடுத்த என்.எஸ்.கே. நகர், பாவடம் தோப்பு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வாசித்து வருகின்றனர். இந்நிலையில் என்.எஸ்.கே நகர், பாவடம் தோப்பு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கவுண்டன்ய ஆற்றினை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 1,400 வீடுகள் இடிக்கப்படுவதாக பொதுப்பணி துறை, வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்து, சுமார் 1,300க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் வரை இடிக்கும் பணிகளை நடந்து வந்த நிலையில், எஞ்சியுள்ள 100 வீடுகளை தற்போது இடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று 100 வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகள் இடிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தாங்கள் மந்தைவெளி புறப்போக்கில் வசித்து வருவதாகவும் எங்கள் வீடுகளை இடிக்க கூடாது என டி.எஸ்.பியிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து இதுகுறித்து சப்-கலெக்டர், தாசில்தார், பொதுப்பணி துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி ராமமூர்த்தி உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் டிஎஸ்பி சமரசம் குடியாத்தம் பகுதியில் கவுண்டன்ய ஆற்றின் appeared first on Dinakaran.