ஊட்டி,நவ.17: ஊட்டியில் மழை குறைந்துள்ள நிலையில் காய்கறி பயிர்களுக்கு மைக்ரோ ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கேரட், உருளைகிழங்கு, பீன்ஸ்,பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற இங்கிலீஸ் காய்கறிகள் எனப்படும் மலை காய்கறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின் தற்போதும் தேயிலைக்கு அடுத்தப்படியாக நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாகவும், பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடிய ஒரு அங்கமாகவும் காய்கறி விவசாயம் விளங்கி வருகிறது.
தற்போது சுமார் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயமும், 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மலை காய்கறி பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் சுமார் 5 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்த நிலையில் இதனை பயன்படுத்தி விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே பயிரிட்டு அறுவடைக்கு தயராக உள்ள கேரட், பீட்ரூட், உருளைகிழங்கு உள்ளிட்ட பயிர்களின் வளர்ச்சிக்கும் மழை உதவி கரமாக இருந்தது. ஆனால் கடந்த 5 நாட்களாக மழையின்றி மேகமூட்டம் மற்றும் காலை வேளைகளில் லேசான நீர் பனிப்பொழிவு உள்ளது. இதனால் பயிர்கள் பாதிக்காத வண்ணம் விவசாயிகள் மைக்ரோ ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
The post ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் மலைகாய்கறி பயிர்களுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சல் appeared first on Dinakaran.