×

பாஜ ஆட்சிக்கு வந்தால் காங்.கின் திட்டங்களை நிறுத்தி விடுவார்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜ ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் செயல்படுத்திய திட்டங்களை நிறுத்தி விடுவார்கள் என ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்தார். ராஜஸ்தானில் வரும் 25ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி,சுரு மாவட்டம் தாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசுகையில்,‘‘மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்தால், பழைய ஓய்வூதிய திட்டம்,மருத்துவ காப்பீடு, மானிய விலையில் காஸ் சிலிண்டர்கள், பெண்களுக்கு ரூ.10,000 வருடாந்திர உதவி தொகை அளிப்பது போன்ற காங்கிரசின் திட்டங்கள் நிறுத்தப்படும். கோடீஸ்வர தொழிலதிபர்களுக்கு அந்த கட்சி மீண்டும் உதவி செய்யும். காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஏழைகள், விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோர் பயன் பெறுவார்கள்.

விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதனால் அவர்கள் பெரிதும் பயன் அடைவர். அதானியின் ஆட்சி வேண்டுமா? விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உதவக்கூடிய அரசு வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மோடியின் கேரண்டி என்ற பெயரில் பிரதமர் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கிறார். மோடியின் கேரண்டி என்பது அதானி ஆகும். ஆனால், காங்கிரஸ் என்பது விவசாயிகள்,தொழிலாளர்கள், இளைஞர்களுக்கான அரசு. காங்கிரஸ் ஆட்சியில் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படும். ஆனால் பாஜ ஆட்சியில் அதானியின் பாக்கெட்டிற்கு பணம் செல்கிறது.அதானி வெளிநாட்டில் கம்பெனி தொடங்குவதற்கு பாஜ உதவுகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

The post பாஜ ஆட்சிக்கு வந்தால் காங்.கின் திட்டங்களை நிறுத்தி விடுவார்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Rahul Gandhi ,Jaipur ,Rajasthan ,Congress.… ,
× RELATED மோடிக்கு எதிராக வன்முறையை தூண்டும்...