×

7 நாள் துக்கம் கடைபிடிக்க வேண்டும் சங்கரய்யா சமரசமின்றி பின்பற்றிய கொள்கைகளை உறுதியாக பின்பற்றுவோம்: கே.பாலகிருஷ்ணன் அறிக்கை

சென்னை: மார்க்சிஸ்ட் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு ஒருவாரம் துக்கம் கடைபிடிக்க வேண்டும். சங்கரய்யா சமரசமின்றி பின்பற்றிய கொள்கைகளை உறுதியாக பின்பற்றுவோம் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான என்.சங்கரய்யா (102), வயது மற்றும் உடல் நலக் குறைவின் காரணமாக சென்னை மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவருக்கு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

1964ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதில் முக்கியப் பங்காற்றிய தலைவராக என்.சங்கரய்யா இருந்தார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை வளர்த்தெடுத்த தலைவர்களில் ஒருவரான என்.சங்கரய்யா, அகில இந்திய பொதுச் செயலாளர் மற்றும் அகில இந்திய தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் நெடுங்காலம் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருதை உருவாக்கி முதல் விருதை தோழர் சங்கரய்யாவுக்கு அவரது நூறாவது பிறந்த நாளின் போது வழங்கி சிறப்பித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அனைத்து கிளைகளும் கட்சியின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும், அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். சங்கரய்யா சமரசமின்றி பின்பற்றிய புரட்சிகர உணர்வு மற்றும் கொள்கைகளை உறுதியாக பின்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post 7 நாள் துக்கம் கடைபிடிக்க வேண்டும் சங்கரய்யா சமரசமின்றி பின்பற்றிய கொள்கைகளை உறுதியாக பின்பற்றுவோம்: கே.பாலகிருஷ்ணன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Sankaraya ,K. Balakrishnan ,Chennai ,Marxist ,Sankaraiya ,
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...