×

காங்கிரஸ், பழங்குடியினர் சமூகத்தினரை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

டெல்லி: காங்கிரஸ், பழங்குடியினர் சமூகத்தினரை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது என பிரதமர் மோடி மத்திய பிரதேச பிரச்சார கூட்டத்தில் குற்றம் சாட்டினார். மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வரவுள்ளது. தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் பிரதான ஆளும் கட்சி பாஜக , எதிர்க்கட்சி காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்தியப் பிரதேசம், ஜபுவா மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், ‘ காங்கிரஸ் கட்சி எப்போதும் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. ஆனால், பாஜக பட்டியலின, பழங்குடியினர் சமூகத்தினரின் நலனை கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இரட்டை இயந்திர அரசு பழங்குடியின சமூகத்தின் வாழ்க்கையை மாற்ற பாடுபட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் கூட பழங்குடியின சமூகம் காங்கிரசுக்கு எதிராகவே உள்ளது. காங்கிரஸுக்கு எதிரான கோபத்தில் மக்கள் உள்ளனர். மக்கள் எப்போதும் பாஜகவுக்கு ஆதரவாகவே உள்ளனர்.

பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த மகளை நாட்டின் உயரிய பதவியில் அமர வைத்துள்ளோம். பழங்குடியின கலாச்சாரத்திற்கு பாஜக என்றும் மரியாதை அளிக்கிறது. இதற்காக பழங்குடியின மக்கள் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு நினைவிடங்களை பாஜக கட்டி வருகிறது. பிர்சா முண்டா பிரபுவின் பிறந்தநாளை பழங்குடியினரின் பெருமை தினமாக நாடு முழுவதும் கொண்டாட வேண்டும். கொரோனா காலத்தில் கூட பாஜக மக்களை கடவுள் பார்த்து கொள்வார் என்று விட்டுவிடவில்லை என்றும் பிரதமர் மோடி மத்திய பிரதேச பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார்.

The post காங்கிரஸ், பழங்குடியினர் சமூகத்தினரை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,PM Modi ,Delhi ,Madhya Pradesh ,Modi ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்...