×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊட்டி நகரில் மலைபோல குவிந்த குப்பைகள்

*அகற்றும் பணிகளில் நகராட்சி நிர்வாகம் தீவிரம்

ஊட்டி : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊட்டி நகரில் மலை போல குவிந்த குப்பைகளை அகற்றும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி., மணிக்கூண்டு பகுதியில் நகராட்சி மார்க்கெட் வளாகம் உள்ளது. இங்கு 1300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. துணிக்கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் இங்கு பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக கடந்த 1 வார காலமாக மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஊட்டி மார்க்கெட்டிற்கு வந்து சென்றனர்.

இதனால் மார்க்கெட் வளாகம் கூட்டமாக காட்சியளித்தது. ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றதால் ஊட்டி மார்கெட் வளாகத்தில் குப்பைகள் குவிந்து காணப்பட்டது. மொத்த காய்கறி ஏலமிடும் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் காய்கறி கழிவுகள், குப்பைகள், வெடித்த பட்டாசுகள் என குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்பட்டது.

இது தவிர நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகள், சுற்றுலா தளங்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் பட்டாசு குப்பைகள் அதிகமாக காணப்பட்டது. சுமார் 40 டன்னுக்கும் மேல் குப்பைகள் குவிந்தன. இதனிடையே தீபாவளி பண்டிகை நிறைவடைந்த நிலையில் ஊட்டி நகராட்சி சார்பில் மார்க்கெட் பகுதி மற்றும் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகள் துவக்கப்பட்டன. இப்பணிகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். முதற்கட்டமாக ஊட்டி நகர பகுதிகளில் தூய்மைப்படுத்தப்பட்டன.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊட்டி நகரில் மலைபோல குவிந்த குப்பைகள் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Ooty ,Ooty city ,
× RELATED கடந்த ஒரு வாரத்திற்கு பின்பு ஊட்டி...