×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வேடசந்தூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அய்யலூரில் இன்று நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழிச்சந்தை நடைபெறும்.

மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தையாக அய்யலூர் சந்தை திகழ்கிறது. இந்த சந்தைக்கு திண்டுக்கல் மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து ஆடு, கோழிகளை வாங்கிச் செல்கின்றனர். வரும் 12ம் தேதி தீபாவளி என்பதால் அய்யலூரில் இன்று நடந்த ஆட்டுச்சந்தை களைகட்டியது.

அதிகாலை 3 மணி முதலே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குவிந்தனர். சந்தைக்குள் போதிய இடம் இல்லாததால், சந்தை வெளிச்சாலை வரை கூட்டம் அலைமோதியது. ஆடுகளின் விலை அதிகரித்த போதிலும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடு மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர்.

10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.8,000 வரையிலும், செம்மறி ஆடு ரூ.9,000 வரையிலும், ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.500 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டுசேவல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையாகின. வியாபாரிகள் சேவல்களை சண்டையிட வைத்து வாங்கி சென்றனர். ஆடு, கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Diwali ,Ayyalur ,Vedasandur ,Dindigul district ,weekly market ,
× RELATED அய்யலூர் பேரூராட்சியில்...