×

ஈரோடு ரயில் நிலையம் அருகே தீப்பற்றி எரிந்த கார்: தீ மளமளவென கார் முழுவதும் பரவியதால் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு ரயில் நிலையம் அருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காக வந்த கார் தீப்பிடித்து எரிந்தது. ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த பாலாஜி என்பவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது குடும்பத்தினரை காரில் அழைத்து வந்துள்ளார். அந்த கார் ஈரோடு ரயில் நிலையம் வந்தவுடன் காரில் இருந்தவர்கள் இறங்கினர். அப்போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கினர்.

பின்னர் அந்த தீ மளமளவென பரவ தொடங்கியது. இதனை கண்ட ரயில்வே நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்த பாதுகாப்பு உபகரணங்களை எடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். எனினும் காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. கார் தீப்பிடித்ததும் உடனடியாக காரில் இருந்தவர்கள் கீழே இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஈரோடு ரயில் நிலையம் அருகே தீப்பற்றி எரிந்த கார்: தீ மளமளவென கார் முழுவதும் பரவியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Erode railway station ,Erode ,Dinakaran ,
× RELATED சாலையில் ஜல்லி கற்கள்: அகற்றி சீர்செய்த போலீஸ்