×

2024 மலர் கண்காட்சிக்கு தயாராகும் தாவரவியல் பூங்கா விதை சேகரிப்பு, விதைப்பு பணிகள் துவக்கம்

ஊட்டி : 2024ம் ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்பு மற்றும் விதைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.கோடை சீசனின்போது, ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை, மகிழ்விப்பதற்காக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்கா ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காக்களில் காய்கறி கண்காட்சியும் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

இதில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், ஆண்டு தோறும் தாவரவியல் பூங்கா மற்றும் தொட்டிகளில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். இந்த மலர் செடிகளில் ஏப்ரல் இறுதி வாரம் முதல் பூக்கள் பூக்க துவங்கும். மே மாதம் இரண்டாவது வாரத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும்.

அப்போது, பல வகையான வண்ண வண்ண மலர் பூத்து குலுங்கும். மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட தொட்டிகள் அலங்கரித்து வைக்கப்படும். இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். இந்த மலர் கண்காட்சிக்காக நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் துவங்கும். இதற்காக, தற்போது விதை சேகரிப்பு பணிகள் மற்றும் நடவு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

6 மாதங்களுக்கு பின் பூக்க கூடிய மலர் செடிகளான டெல்போனியா, பென்சீனியம், பெட்டூனியம் மற்றும் சால்வியா உள்ளிட்ட சிலர் மலர் செடிகளின் விதைகள் ேசகரிக்கும் பணிகள் முடிந்தது. தற்போது, நர்சரியில் நடவு பணிகளும் துவங்கியுள்ளது. அதேபோல், விதைகள் ேசகரிக்கப்பட்ட மலர் செடிகள் மற்றும் மழையில் அழுகிய செடிகளும் அகற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதிகளில் பாத்திகளை சீரமைத்து விதைப்பிற்காக தயார்படுத்தப்பட்டு விதைப்பு பணிகளும் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து ேதாட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘2024ம் ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக, பூங்காவை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, விதைகள் சேகரிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. 6 மாதத்திற்கு ஒரு முறை பூக்க கூடிய சில மலர் செடிகளை உற்பத்தி செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. விதைகள் சேகரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. அத்தோடு 6 மாதங்களுக்கு பின் பூக்கும் மலர் செடிகளின் விதைப்பு பணி தற்போது துவக்கப்பட்டுள்ளது.

நாற்றுகள் தயார் ஆனவுடன் பூக்கள் பூக்கும் மாதத்திற்கு ஏற்ப விதைகள் நடவு செய்யும் பணிகள் துவக்கப்படும். தற்போது மேரிகோல்டு, சால்வியா, பெட்டூனியம், டெல்பீனியம் ஆகிய செடிகளின் விதைகள் சேகரிக்கப்பட்டு விதைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. நாற்று உற்பத்தி முடிந்தவுடன், நடவு பணிகள் படிப்படியாக துவக்கப்பட்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறும்’’ என்றனர்.

The post 2024 மலர் கண்காட்சிக்கு தயாராகும் தாவரவியல் பூங்கா விதை சேகரிப்பு, விதைப்பு பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED என் ஓவியங்கள் பெண் சமுதாயத்திற்கான கேள்விக்கணை!