×

திருச்செந்தூர் பகுதியில் விடிய விடிய மழை விவசாயிகள் மகிழ்ச்சி

உடன்குடி, அக். 31: திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விடிய, விடிய மிதமான மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வரும் நிலையில் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான, ஆலந்தலை கல்லாமொழி, காயாமொழி, தளவாய்புரம், குமாரபுரம், ராணிமகாராஜபுரம், அடைக்கலாபுரம், நடுநாலுமூலைகிணறு, கீழநாலுமூலைகிணறு, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருச்செந்தூரில் பெய்த மழையால் பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. மேலும் டி.பி ரோட்டில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி, செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பும் சாலையில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலையில் தேங்கியது. பல மாதங்களாக ஏமாற்றி வந்த மழை , தற்போது பரவலாக பெய்திருப்பது விவசாயிகள் மற்றும் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post திருச்செந்தூர் பகுதியில் விடிய விடிய மழை விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Udengudi ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!