×

திண்டிவனம் புறவழிச்சாலையில் கார் கண்ணாடியை உடைத்து தங்க நகை, பணம், செல் போன் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை: போலீசாரை விசாரணை

விழுப்புரம்: திண்டிவனத்தில் கார் கண்ணாடியை உடைத்து ஒரு பவுன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய் பணம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயகோபு மகன் பாஸ்கர்(42). இவர் நேற்று முன்தினம் காரில் அவரது மனைவி சூரியசந்திரகலா மற்றும் இவரது குழந்தை உடன் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.

மீண்டும் நேற்று திருப்பதியில் இருந்து வந்து, திண்டிவனம் புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் உணவகம் எதிரே காரை நிறுத்திவிட்டு, காரில் குழந்தையின் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம், செல் போன் ஆகியவற்றை வைத்துவிட்டு, உணவு அருந்த சென்றுள்ளனர். மீண்டும் வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரின் உள்ளே பார்த்தபோது ஒன்னேகால் பவுன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து திண்டிவனம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, காரின் கண்ணாடியை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தனியார் உணவகம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து தங்க நகை, பணம் மற்றும் செல்போன் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post திண்டிவனம் புறவழிச்சாலையில் கார் கண்ணாடியை உடைத்து தங்க நகை, பணம், செல் போன் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை: போலீசாரை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Dindivanam Outpost ,Villapuram ,Dindivanam ,Dinakaran ,
× RELATED திண்டிவனம் அருகே கணவனின் தகாத உறவால் தற்கொலை செய்து கொண்ட மனைவி