×

அகஸ்தியர்பட்டியில் இருந்து பாவூர்சத்திரம் வரை ஓட்டை உடைசல் அரசு பஸ் இயக்கம்

*திடீரென நடுவழியில் நிற்பதால் பயணிகள் தவிப்பு

விகேபுரம் : அகஸ்தியர்பட்டியில் இருந்து பாவூர்சத்திரம் வரை ஓட்டை உடைசலான அரசு பஸ் இயக்கப்படுவதால் பயணிகள் தவித்து வருகின்றனர். விகேபுரம் அருகே அகஸ்தியர்பட்டியிலிருந்து பாவூர்சத்திரம் வரை தினமும் டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணி நிமித்தமாக வேலைக்கு செல்வோர் இந்த பஸ்சில் தான் பயணிக்கின்றனர். பஸ்சில் பல இடங்கள் ஓட்டை, உடைசலாக காணப்படுகிறது. பஸ்சின் மேற்கூரை கடுமையாக சேதமடைந்துள்ளதால் மழைக்காலங்களில் இதில் பயணம் செய்யும் பயணிகள் மழையில் நனைந்தவாறே செல்லும் நிலை தான் உள்ளது. மேலும் மேற்கூரை எப்போது விழும் என்ற அச்சத்தில் பயணிகள் பயணம் செய்கின்றனர். பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள் முழுவதும் பழுதடைந்து மூடிய நிலையில் திறக்க முடியாமல் உள்ளது.

இதனால் பகல் நேரங்களில் பயணம் செய்யும் பயணிகள் காற்றோட்டம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பேருந்தின் சீட்டுகளும், கைப்பிடிகளும் எந்த நேரத்தில் விழும் என்கிற ஆபத்தான நிலையில் தான் உள்ளது. மேலும் பஸ் அடிக்கடி ரிப்பேர் ஆகி இடையிலேயே நின்று விடுவதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெரும் அசம்பாவிதம் நடைபெறும் முன் சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறையினர் இவ்வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கிராமப்புற பகுதிகளை இணைக்கும் அகஸ்தியர்பட்டியில் இருந்து பாவூர்சத்திரம் இயக்கப்படும் பேருந்தில் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பஸ் ஓட்டை, உடைசலாக இருப்பதால் மழை காலங்கள் மட்டுமின்றி வெயில் காலங்களில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பஸ்சில் கைப்பிடி கூட உடைந்துள்ளது. இதனால் பஸ்சில் சவாலான பயணத்தை மேற்கொள்ளும் நிலை தான் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரதான வழித்தடத்தில் பல ஆண்டுகளாக இந்த பஸ் தான் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் திடீரென பழுதாகி நிற்பதால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை தான் உள்ளது. எனவே, இந்த வழித்தட பயணிகள் நலனை கருத்தில் கொண்டு புதிய பேருந்து இயக்க போக்குவரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post அகஸ்தியர்பட்டியில் இருந்து பாவூர்சத்திரம் வரை ஓட்டை உடைசல் அரசு பஸ் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Ota ,Udisal ,Govt Bus Operation ,Agasthyarpatti ,Pavurchatram ,Vikepuram ,Potholed government ,Bhavoorchatram ,Dinakaran ,
× RELATED கம்மல் ஓட்டையை அடைக்கும்...