×

திருவல்லிக்கேணியில் மீண்டும் பரபரப்பு மாடு முட்டி பெண் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திருவல்லிக்கேணியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாலையில் நடந்து சென்ற முதியவர், மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில், தற்போது மீண்டும் மாடு முட்டியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி செல்வி (51), நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் குப்பை கொட்ட சென்றார். அப்போது, குப்பை தோட்டி அருகே நின்று கொண்டிருந்த மாடுகளில் ஒன்று, திடீரென செல்வியை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயமடைந்து எழுந்து நிற்க முடியாமல் அலறினார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, அந்த மாட்டை அங்கிருந்து துரத்தினர். பின்னர் செல்வியை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பார்த்தசாரதி கோயில் அருகே, சாலையில் நடந்து சென்ற முதியவர், மாடு முட்டி படுகாயமடைந்தார். உடனே, மாநகராட்சி அதிகாரிகள், அந்த பகுதியில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து சென்றனர். இந்த சம்பவம் நடந்த சில நாகளில் மீண்டும் மாடு முட்டி பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் திருவல்லிக்கேணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருவல்லிக்கேணியில் மீண்டும் பரபரப்பு மாடு முட்டி பெண் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tiruvallikkeni ,Chennai ,Tiruvallikeni ,
× RELATED வாங்கிய 7 மாதத்தில் 3 முறை பழுது; ஷோரூம்...