×

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் பாஜவின் பங்கு நிரூபணமாகியுள்ளது: அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் வாதம்

சென்னை: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி.ஆ.ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என விளக்கமளிக்குமாறு உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ- வாரண்டோ வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகள், நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி மனுஸ்மிருதி, சனாதனம் ஆகியவற்றையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து அவர் வாதிடும்போது, சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா?. மனுதாரருக்காக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதில் இருந்து இந்த வழக்கில் கண்ணுக்கு தெரியாமல் பாஜகவின் பங்கு இருப்பது தெளிவாகிறது. நாத்திகத்தை பின்பற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. சமூக நலம், சீர்திருத்தங்கள் பற்றி பேசவும் உரிமை உள்ளது. உதயநிதி தனிப்பட்ட முறையில் தான் பேசினாரே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை. தகுதியில்லாமல் பதவி வகித்தால் மட்டுமே எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என்று விளக்கம் கேட்டு கோ வாரண்டோ வழக்கை தொடர முடியும்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே தகுதி இழப்புக்கு ஆளாகின்றனர். ஆனால் உதயநிதி எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை. சனாதனம் குறித்து பேசியது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என்று மனுதாரர்கள் கூறிய போதும், எந்த முதல் தகவல் அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. அமைச்சர் உதயநிதி பதவியில் நீடிக்க தகுதி உள்ளது. அவர் பதவியில் நீடிக்க ஆளுநர் எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. அப்படி அதிருப்தி தெரிவிப்பதாக இருந்தாலும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. முதலமைச்சரின் ஆலோசனையை பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.

சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. பெரியார் ஏற்கனவே மனுதர்மம், மனுஸ்மிருதி குறித்து கடுமையாக சாடியுள்ளார். மனு தர்மத்தின் ஏற்றத்தாழ்வுகளை பொறுக்காமல் மனு ஸ்மிருதியை அம்பேத்கர் எரித்திருக்கிறார். சனாதன தர்மத்தால்தான் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பெண்களின் உரிமை அனைத்தும் பறிக்கப்பட்டிருந்தது. உடன்கட்டை ஏறுவதும், குழந்தை திருமணமும் மனு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏற்றத்தாழ்வு, சாதி பாகுபாடு போன்றவை குறித்து யார் குரல் கொடுப்பார்?. இது அரசியல் சித்தாந்தம் தொடர்பானது. அரசியல் கொள்கை மோதலில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஜாதி, மத அடிப்படையில் மக்களை பிரித்து வைக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தான் அமைச்சர் உதயநிதி பேசினார். இந்த கொள்கை மோதல் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம், இறையாண்மைக்கு விரோதமாக பேசியதாக குற்றம் சாட்டும் மனுதாரர்கள், அதற்கான ஆதாரங்களை தெரிவிக்கவில்லை. அனைத்து மக்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் உதயநிதி பேசினார்.

பதவியேற்பு உறுதி மொழிக்கு விரோதமாக செயல்படவில்லை. அரசியலமைப்பின்படி பதவியேற்ற ஒருவரை சரியான காரணம் இல்லாமல் பதவி நீக்கம் செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதம் நிறைவடையாததால், வழக்கு விசாரணை அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, நிகழ்ச்சியின் அழைப்பிதழ், பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு உதயநிதி தரப்புக்கு உத்தரவிட்டார். சனாதன தர்மத்தால்தான் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

The post அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் பாஜவின் பங்கு நிரூபணமாகியுள்ளது: அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் வாதம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Minister ,Udayanidhi ,CHENNAI ,Ministers ,Udhayanidhi Stalin ,PK Shekharbabu ,DMK ,MPA ,Raza ,Sanatana ,Udhayanidhi ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...