×

சனாதனம் குறித்து அமைச்சர்கள், திமுக எம்.பி பேசிய வழக்கு விசாரணைக்கு பட்டியலிட்டது எப்படி என்றே தெரியவில்லை: திமுக காரசார வாதம்

சென்னை: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், இந்த வழக்கு எப்படி பட்டியலிடப்பட்டது என்றும் திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது டெங்கு, மலேரியா போன்றது என்றும், அதை ஒழிக்க வேண்டுமென்றும் பேசியுள்ளார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றுள்ளார். இதனைதொடர்ந்து திமுக எம்.பி ஆ.ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

இந்த நிலையில், இவர்கள் மூவரும் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் 3 பேர் மீதும் கோவாரண்டோ மனு தாக்கல் செய்துள்ளனர். இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் என்பவர் சேகர்பாபுவிற்கு எதிராகவும், மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் என்பவர் ஆ.ராசாவிற்கு எதிராகவும், மாநில செயலாளர் டி.மனோகர் என்பவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் கோ வாரண்டோ மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் உதயநிதியின் பேச்சு அடங்கிய பென் டிரைவை மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்ய நீதிபதியிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி கடும் ஆட்சேபனை தெரிவித்தார். சட்ட விதிகளுக்கு முரணாக இதுபோன்ற நடைமுறைகளை நீதிமன்றம் மேற்கொள்ளக்கூடாது என்று வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதி, மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் டி.வி.ராமனுஜத்திடம் வீடியோவில் உள்ளதை மனுவில் தெரிவித்தீர்களா என்று கேட்டார். அதற்கு இல்லை என்று கூறிய மூத்த வழக்கறிஞர், மனு மீது வாதிடுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவர் வாதிடும்போது, மதச்சார்பற்றவராக இருக்க வேண்டிய அமைச்சர் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசியது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மத சுதந்திரத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி. பதவிப்பிரமாண உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் மீறும் வகையில் செயல்பட்ட அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்றார்.
இதற்கு, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், ஆர்.விடுதலை, என்.ஜோதி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இந்த வழக்கை எப்படி விசாரணைக்கு பட்டியலிட்டனர் என்றே தெரியவில்லை. வழக்கு விசாரணைக்கே உகந்ததல்ல. விளம்பர நோக்கத்திற்காகவும், அரசியல் உள்நோக்கத்துடனும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கின் வாதங்களை நாளை (இன்று) மதியம் 2.15க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post சனாதனம் குறித்து அமைச்சர்கள், திமுக எம்.பி பேசிய வழக்கு விசாரணைக்கு பட்டியலிட்டது எப்படி என்றே தெரியவில்லை: திமுக காரசார வாதம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Sanathanam ,CHENNAI ,Minister ,Udhayanidhi ,Sanathana ,Karasara ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி