கிருஷ்ணகிரி, அக்.8: கிருஷ்ணகிரியில், வருகிற 12ம் தேதி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி வரும் 12ம் தேதி(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்க உள்ளது. அதன்படி, 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 8 கி.மீ., மாணவிகளுக்கு 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 10 கி.மீ., மாணவிகளுக்கு 5 கி.மீ., தூரத்திற்கு போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க நுழைவு வாயிலில் துவங்கி, பெத்ததாளப்பள்ளி, வடுகம்பட்டி கூட்டு ரோடு, கங்கலேரி பெட்ரோல் பங்க் வரை சென்று, மீண்டும் அதே வழிதடத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை நடைபெறவுள்ளது. ஓட்டப்போட்டியில் பங்குபெறும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் உடற்தகுதி குறித்த சுய உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். மேலும், 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர்களிடம் கண்டிப்பாக வயது சான்றிதழ் தனித்தனியாக பெற்று வருதல் வேண்டும்.
ஆதார் கார்டு, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வருதல் வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்கள் தங்களது பிறப்பு சான்றிதழ் ஆதார் கார்டு நகல் கொண்டு வருதல் வேண்டும். முதல் பரிசாக ₹5 ஆயிரம், 2ம் பரிசாக ₹3 ஆயிரம், 3ம் பரிசாக ₹2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 வரை இடம் பெறுபவர்களுக்கு தலா ₹1000 பரிசுத்தொகை(வங்கி கணக்கில் மட்டுமே) வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் உடற்தகுதி குறித்த சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்திட மற்றும் வயது சான்றிதழ் சரிபார்ப்பதற்காக 11ம் தேதி மாலை 6 மணிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு நேரில் வந்து பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி appeared first on Dinakaran.