×

மதுபோதையில் மூதாட்டியை கொலை செய்த வாலிபர் அதிரடி கைது

ரிஷிவந்தியம், அக். 6: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலியாபாத்பாளையம் கிராமத்தில் நேற்று முன் தினம் அதிகாலை மாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் ஆனந்தாயி (80) என்ற மூதாட்டி ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். ரிஷிவந்தியம் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சிவசந்திரன், நந்தகோபால், முதல்நிலை காவலர்கள் ராமச்சந்திரன், சிவஜோதி, பாஸ்கர், வீரப்பன், மணிமாறன் உள்பட 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில் கோயில் அருகே ஆண் ஒருவரின் காலணி இருந்துள்ளது. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டபோது காலணியை மோப்பம் பிடித்த மோப்ப நாய் ராக்கி, கோயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஏரியின் உள்பகுதியில் மது பாட்டில்கள் கிடந்த இடத்தை காண்பித்துள்ளது. தனிப்படை விசாரணையில், காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன்(19), கார்த்தி(22), அலெக்சாண்டர் (32) ஆகிய மூன்று நபர்கள் மோப்பநாய் காண்பித்த அந்தப் பகுதியில் மது அருந்தியதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து மூன்று நபர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்த தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூவரும் சம்பவம் நடந்த முன்தினம் இரவு 10 மணிக்கு ஏரி பகுதியில் மது அருந்தியதும், அதில் ஜெயசீலன் 10.45 மணிக்கு வீட்டிற்கு சென்று விட, கார்த்தி என்பவரும் 11.15 மணிக்கு வீட்டிற்கு சென்ற விட்டனர். பின்னர் கடைசியாக தனியாக இருந்த அலெக்சாண்டர் அதீத போதையில் தட்டு தடுமாறி ஏரியிலிருந்து கோயிலுக்குள் வந்துள்ளார். போதையில் இருந்த அலெக்சை பார்த்த மூதாட்டி ஆனந்தாயி மது போதையில் கோயிலுக்குள் வரக்கூடாது என எச்சரித்ததாக கூறப்படுகிறது.

போதையின் உச்சத்தில் இருந்த அலெக்சாண்டர், மூதாட்டி ஆனந்தாயியை எட்டி உதைத்து கடுமையாக தாக்கியுள்ளான். இதில் மூதாட்டி இறந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குற்றவாளி அலெக்சாண்டரை கைது செய்த போலீசார் அவனை சிறையில் அடைத்தனர். மூதாட்டி இறந்து 24 மணி நேரத்திற்குள் சம்பவ இடத்தின் அருகே கிடந்த மதுபாட்டில்கள், காலணி ஒன்றை வைத்து குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி மனோஜ்குமார் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

The post மதுபோதையில் மூதாட்டியை கொலை செய்த வாலிபர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Rishivantiyam ,Aliapadpalayam ,Rishivanthiyam ,Kallakurichi district ,
× RELATED ரிஷிவந்தியம் அருகே சாலையில் தூங்கிய பெண் மீது மினி லாரி ஏறி பலி