×

20 தமிழர்கள் என்கவுன்டரில் வாதாடிய வக்கீல் வீடு உட்பட 60 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: ஆந்திரா, தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: ஆந்திரா மாநிலம் திருப்பதி, குண்டூர், நெல்லூர் உட்பட தெலங்கானா மாநிலம் ஐதராபாத், வாரங்கல் நகரம் என 2 மாநிலங்களில் மொத்தம் 60 இடங்களில் ஒரேநேரத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் மாவோயிஸ்டுகள், நக்சலைட் குழுக்கள் தொடர்பான வழக்குகளிலும், தமிழர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டதில் போலீசாருக்கு எதிராக நீதிமன்றங்களில் வாதாடிய வக்கீல்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் புரட்சி எழுத்தாளர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதன்படி ஐதராபாத்தில் உள்ள அல்வாலில் அமர பந்துமித்ரு சங்கம் மற்றும் சிவில் உரிமைகள் சங்க தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலியாட்கள் 20 பேர் திருப்பதி அருகே சேஷாச்சலம் வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகி வாதாடிய திருப்பதியை சேர்ந்த வழக்கறிஞர் கிராந்தி சைதன்யாவிற்கு சொந்தமான யோகிமல்லவரத்தில் உள்ள அவரது வீடு, கூடூர் அடுத்த பாலய்யக்காரி கிராமத்தில் உள்ள வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சோதனை நடந்து வருவதால், ஆந்திரா, தெலங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post 20 தமிழர்கள் என்கவுன்டரில் வாதாடிய வக்கீல் வீடு உட்பட 60 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: ஆந்திரா, தெலங்கானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : NIA ,Andhra, Telangana ,Tirumala ,Andhra ,Tirupati ,Guntur ,Nellore ,Telangana ,Hyderabad, ,Warangal ,
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி