×

மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா: 15 அடி சிலை, 12,000 லட்டு பிரசாதம், 20,000 பக்தர்கள்

வாஷிங்டன்: வாஷிங்டன் மாகாணம் ரெட்மாண்டில் உள்ள மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்தியாவை விட்டு பிரிந்து சென்றாலும், இந்திய திருவிழாக்களை அங்குள்ள அமெரிக்க மக்களோடு கலந்து கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுடன் விநாயகர் சதுர்த்தியும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரெட்மாண்ட் மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் பணியாற்றும் இந்தியர்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

மும்பையில் உருவாக்கப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட 15 அடி உயர கண்கவர் விநாயகர் சிலை, 40 அடி அகலமுள்ள பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கம்பீரமாக வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. அந்த விநாயகருக்கு ‘ரெட்மாண்ட் ராஜா’ என்ற செல்லப்பெயரும் சூட்டப்பட்டது. விழாவில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 12 ஆயிரம் லட்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான பழ வகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இசைக்கலைஞர்களின் மேற்கத்திய இசை வடிவ பக்தி பஜனை நிகழ்ச்சியும் அங்கு நடந்தது. விழாவில் சான் பிரான்சிஸ்கோவுக்கான இந்திய துணை தூதர் கே.ஸ்ரீகர் ரெட்டி கலந்து கொண்டார்.

The post மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா: 15 அடி சிலை, 12,000 லட்டு பிரசாதம், 20,000 பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturthi Festival ,Microsoft HQ ,Washington ,Ganesha Chaturthi festival ,Microsoft ,Redmond, Washington state ,Indians ,America… ,Lattu Prasad ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...