×

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 15,000 பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை: கல்லூரி முதல்வர் பி.பாலாஜி தகவல்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இதய தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பாலாஜி தலைமை வகித்தார். இதயவியல் துறை தலைவர் டாக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர் கலந்து கொண்டு இதய நோய்க்கான மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்தி மலர் பேசியதாவது: உலக இதய தினத்தின் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ‘இதயத்தை பயன்படுத்து, இதயத்தை அறிந்துகொள்’ என்பதாகும்.

இது நம் இதயங்களை புரிந்துகொள்வதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. ரத்த அழுத்தம், இதய துடிப்பு, ரத்த பரிசோதனைகள் மற்றும் கொழுப்பு அளவுகள் போன்ற முக்கிய அம்சங்களை புரிந்துகொள்வது, இதய ஆரோக்கியத்தை மதிப்பிடவும், பராமரிக்கவும் இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது. தொடர்ந்து வேகமாக அதிகரித்து வரும் நோய்களில் ஒன்றாக இதயநோய் மாறி வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்றாலும் சீரற்ற உடல் பழக்கம், மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதய நோய்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, போதிய தூக்கம், உப்பு, சர்க்கரையை குறைவாக எடுத்துக்கொள்ளுதல் உள்ளிட்டவைகளை கண்டிப்புடன் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.

குறிப்பாக, இத்தகைய பழக்கங்களை மருத்துவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். விழாவில் கல்லூரி முதல்வர் பாலாஜி பேசியதாவது: ஸ்டான்லி மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கான ‘கேத் லேப்’ தொடங்கிய 5 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு ‘ஆஞ்சியோகிராம்’ பரிசோதனை மற்றும் ‘ஆஞ்சியோ பிளாஸ்ட்’ சிகிச்சை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதயநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 115 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இதய வால்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனை இதயநோய் பிரிவு இதர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு நவீன கட்டமைப்பு வசதிகள், திறமையான மருத்துவர்கள்தான் காரணம். இதயநோய் சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிகமான தொகை செலவு செய்ய வேண்டிய நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கட்டணம் ஏதுமின்றி முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் உதவியுடன் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

The post சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 15,000 பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை: கல்லூரி முதல்வர் பி.பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Stanley Government Hospital ,P. Balaji ,Chennai ,World Heart Day ,Government ,Stanley ,Medical ,College ,Hospital ,Vannarappat, Chennai ,Principal ,B. Balaji ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...