×

ஆசியாவிலேயே மிக பழமையான சரசுவதி மகால் நூலகத்திற்கு மக்கள் வருகை அதிகரிப்பு

*ஓலைச்சுவடிகள், காகித ஏடுகள், அச்சுப்புத்தகங்களை காண ஆர்வம்

தஞ்சாவூர் : ஓலைச்சுவடிகள், காகித ஏடுகள், அச்சுப்புத்தகங்களை காண ஆர்வம் மிகுதியால் ஆசியாவிலேயே மிக பழமையானதாக விளங்கும் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்திற்கு மக்கள் வருகை அதிகரித்து உள்ளது.ஆசியாவிலேயே மிக பழமையான நூலகம். அது தான் நமது தஞ்சையில் உள்ள சரசுவதி மகால் நூலகம். கி.பி.1531-1675 வரை ஆண்ட தஞ்சை நாயக்க மன்னர்களின் அரசாங்க நூலகமாக தொடங்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம். பின்னர், கி.பி. 1675ம் ஆண்டு தஞ்சையை கைப்பற்றிய மராட்டிய மன்னர்களும் இந்த நூலகத்தை பேணிப்பாதுகாத்து வளா்த்து வந்தனர்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது சரசுவதி மஹால் நூலகம். இது ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்று. இந்த நூலகம், நாயக்கர் மற்றும் மராட்டிய மன்னர்களின் 300 ஆண்டுகால சேகரிப்பின் பொக்கிஷமாக திகழ்கிறது. மராட்டிய மன்னர்களுள் புகழ்பெற்று விளங்கிய சரபோஜி மன்னரின் (கி.பி.1798-1832) சேவையை நினைவு கூறும் விதமாக இந்த நூலகத்திற்கு சரபோஜி சரசுவதி மகால் நினைவு நூலகம் என பெயர் சூட்டப்பட்டது. அத்துடன், இரண்டாம் சரபோஜி மன்னர், 1820ம் ஆண்டு காசிக்கு சென்றபோது, ஏராளமான சமஸ்கிருத நூல்களை கொண்டு வந்து சேர்த்தார். மேலும், இவர் காலத்தில், அயல்நாட்டு மொழியிலான 5000 அச்சுப்புத்தகங்களும், பல சிறந்த ஓவியங்களும் சேர்க்கப்பட்டன.

ஆகையால் இந்நூலகம் சரபோஜி சரசுவதி மகால் நூல் நிலையம் என்ற பெயரை பெறுவதற்கு காரணமாக அமைந்தது. இந்த நூலகத்தில் அரியவகை ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவை சார்ந்த பிறமொழி காகித குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.இங்கே சங்ககால இலக்கிய உரைகள், மருத்துவ குறிப்புகள் உள்ளிட்ட 30,433 ஓலைச்சுவடிகள், 6,426 புத்தகங்கள் மற்றும் இதழ்களும் உள்ளன. நூலகத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு அருங்காட்சியகமும் நூலக கட்டிடத்தில் இடம் பெற்றுள்ளது. அதன்படி, இங்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரேக்கம் ஆகிய பல மொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் உள்ளன.

அத்துடன் வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், தத்துவம் முதலிய பல்வேறு கலையியல் நூல்களும் உள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன்னர் படியெடுத்து எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம் மற்றும் திருக்குறள் ஆகிய நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய, ஐரோப்பிய நாடுகளில் உள்ள
அழகிய நகரங்களின் படங்கள், உடற்கூறு, தாவரம் முதலிய கலைகளுக்குரிய பல நிறப்படங்கள், சிறந்த ஓவியங்கள் முதலியவை உள்ளன. தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடம் இது. பல்வேறு வரலாற்று ஆவணங்களை சுமந்தபடி கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த சரசுவதி நூலகம்.

சரசுவதி மகால் நூலகத்தில் சமஸ்கிருதம், தமிழ், மராத்தி மற்றும் தெலுங்கில் எழுதப்பட்ட 49000க்கும் மேற்பட்ட ஓலை மற்றும் காகித சுவடிகள் உள்ளன. அதில் 25000 சுவடிகள் பனைஓலை சுவடிகளும் 24000 காகித ஏடுகளும் ஆகும். இவை தவிர 69000 அச்சு புத்தகங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. அவற்றுள் 5000 புத்தகங்கள் சரபோஜி மன்னர் சேகரித்தவை. பல்வேறு அரிய ஓவியங்கள், ஓலைச்சுவடிகள், மன்னர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கும் வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட மக்கள் இங்கு வந்து பார்த்து செல்வது வழக்கம். சமீப காலமாக சரசுவதி நூலகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை

இந்நிலையில் சரபோஜி மன்னரின் 246ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் சரசுவதி மகால் நூலகம் வெளியிடும் நூல்களுக்கு சிறப்பு சலுகையாக 31.03.2016க்கு முன்பு வெளிவந்த நூல்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும், அதற்கு பிறகு வெளிவந்த நூல்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் அளித்து விற்பனை செய்யப்படவுள்ளது. தள்ளுபடி விற்பனை 24.09.2023 முதல் 31.10.2023 வரை வழங்கப்படும்.

இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பன்மொழி இலக்கிய இலக்கண நூல்களையும் கோயிற்கலை, சோதிடம், மருத்துவம், நாட்டியம், இசை, நாடகம், கணிதம், வாஸ்து போன்ற பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் வாங்கிப்பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டரும், சரசுவதி மகால் நூலக இயக்குநருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

The post ஆசியாவிலேயே மிக பழமையான சரசுவதி மகால் நூலகத்திற்கு மக்கள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Saraswati Mahal Library ,Asia ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...