×

அம்பத்தூர் மண்டலத்தில் இன்று மக்களை தேடி மேயர் திட்ட முகாம்: மக்கள் மனு அளிக்கலாம்

சென்னை, செப்.20: அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பி.எஸ்.பி. கன்வென்ஷன் அரங்கில் இன்று “மக்களை தேடி மேயர்” திட்டத்தின் கீழ், பொதுமக்களிடமிருந்து நேரடியாக மேயர் பிரியா கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி மேயரின் 2023-24ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், “மக்களை தேடி மேயர்” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை களையும் பொருட்டு, “மக்களைத் தேடி மேயர்” திட்டம் கடந்த 3.5.2023 அன்று மண்டலம்-5ல் தொடங்கப்பட்டது. இதில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, 31.5.2023 அன்று மண்டலம்-6லும், 5.7.2023 அன்று மண்டலம்-13லும், 10.8.2023 அன்று மண்டலம்-1லும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மக்களை தேடி மேயர் திட்டத்தின் கீழ், அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட சிப்காட் வளாகம், பி.எஸ்.பி. கன்வென்ஷன் அரங்கில் இன்று (20ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் ஆர்.பிரியா, மண்டலம்-7க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார். எனவே, மண்டலம்-7க்குட்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயனடையலாம்.

The post அம்பத்தூர் மண்டலத்தில் இன்று மக்களை தேடி மேயர் திட்ட முகாம்: மக்கள் மனு அளிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Mayor Project Camp ,Ambattur Mandal ,Chennai ,PSB ,Ambattur ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...